சாபங்களும் வரங்கள் ஆகலாம்.
ஏன்டா அதுக்குள்ளே எந்திரிச்சுட்டே ? போறுமா! அம்மா கேட்டாள்
போரும்மா, வயறு சரியில்லே!
ஏன்டா வயறு சரியில்லையா இல்லை மனசு சரியில்லையா? எங்கிட்ட ஏன் பொய்
சொல்றே. என்ன நடந்துதுன்னு நீ இப்போ வயத்தைக் காயப்போடுராய் உன் அப்பா
என்ன அப்படி அதிசயமாய் திட்டிட்டார், தினம்தான் திட்டறார். நீ அந்த
பாலாய்போன டிகிரியை வாங்கி வந்த நாள் அன்னைக்கு வாழ்த்தினதொடு சரி.
மருநால்லேர்ந்து திட்டிண்டுதான் இருக்கார். வயத்துக்கு வஞ்சனை பண்ணாமல்
ஒழுங்காய் இன்னும் இரண்டு தோசை தின்னு,
அம்மா உன்னால் மட்டும் எப்படி இப்படி இருக்க முடிகிறது. அதனாலதான் கொண்டு
வந்தாலும் வராவிட்டாலும் தாய் என்கிறார்களோ. அவன் கலங்கிய கண்களோடு அவளைப்
பார்த்தான். ஏற்கனவே புகையின் நடுவில் மங்கலாய் தெரிந்த அம்மா இன்னும்
மங்கலாய் தெரிந்தாள்.
முரளி இங்க பாரு, இப்ப எதுக்கு மனசப் போட்டு வேதனைப் படுத்திக்கிராய்.
உன்னோடு படிச்ச குழந்தைகள்ள முக்கால் வாசிப்பேர் உன்னை மாதிரித்தான் வேலை
கிடைக்காம போஸ்ட் ஆபீசும் லைப்ரர்யுமாஅலைந்து கொண்டு இருக்கிறார்கள்.
நீயும் பேங்க் பரீட்சை இன்சூரன்ஸ் பரீட்சை என எழுதிக்கொண்டு தான்
இருக்கிறாய். பெயிலாறது கூட கிடையாது. எல்லாம் பாசாயிண்டுதான் இருக்கே.
அப்புறம் நடக்கிற இண்டர்வியுவுலதான் உயரமான மலை எது? பள்ளமான கடல் எது?
ன்னு இரண்டு அபத்தக் கேள்விகளா கேட்டு வீட்டுக்கு அனுப்பிர்ரன். அப்புறம்
அடுத்த வருஷம் பரிச்சைக்கு கூப்பிடறபோது தான் தெரியறது. போன வருஷம்
கோவிந்தான்னு. அதுக்கு நீ என்ன பண்ணுவே. தப்பு உன்மேல இருந்தா இப்படி
அழுது ஆர்ப்பாட்டம் பண்ண வேண்டியதுதான். செய்யாத தப்புக்கு ஏன் அழறே?
எல்லாம் நேரம் வரப்போ தானே வரும்.
அம்மா அவன் தலையைத் தொட்டாள். அவன் முழுவதும் உடைந்தான்.
அம்மா நான் ஒன்னும் வேலை கிடைக்கலைன்னு அழலை. அப்பா எப்போ பார்த்தாலும்
நான் சாப்பிடறதை பத்தி மட்டும்தான் திட்டறார். தண்டசோறு, எருமைமாடு, மூணு
வேலையும் முழுங்கிட்டு ஓட்டச் சிவிங்கி மாதிரி வழங்திருக்கானே தவிர
கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா பாரு. நாள் பூராவும் ஊரைச் சுத்திட்டு
கொட்டிக்கிரதுக்கு மட்டும் வீட்டுக்கு வந்துர்ரான். என்று எப்ப பாத்தாலும்
சாப்பாட்டைப் பற்றி தான்மா திட்டுறார். அதான்மா என்னால பொறுக்க முடியலே.
எனக்கு மட்டும் வேலைக்கு போகனும்னு ஆசை இல்லையா என்ன ? இல்லை
காலம்பூராவும் அப்பா சம்பாத்யத்திலேய ஓடிடும் னு நினைக்கிறேனா இல்லையே
அப்பாவுக்கு இன்னும் நாலைந்து வருசம்தான் சர்வீஸ்னு தெரியும்மா, ஆனா நான்
என்ன பண்ணுவேன் ? உயர்த்தப்பட்டவர்கள் , அது, இது ன்னு இந்த கவர்ன்மெண்டே
ஆயிரத்தெட்டு பிரிவுகளை உண்டாக்கி நாளைக்கு ஒரு சட்டம்னு உண்டாக்கிகிட்டு
இருக்கிறப்போ நூற்றுக்கு நூறு மார்க் வாங்கினாக்கூட நாங்கல்லாம் தெருவிலே
நிற்க வேண்டியதுதான் பிட்சை எடுக்க போக வேண்டியதுதான் .. ஒருவேளை இந்த
கவர்ந்மேண்டோட ஆசை அதுதானோ என்னமோ. எனக்கு அதெல்லாம் கூட கவலை இல்லேம்மா.
அப்பா ஒரு பள்ளிக்கூட வாத்தியாரா இருந்துகொண்டு இப்படி பிரச்சினைகளை
நிதர்சனமா பாக்காம ஏதோ நான்தான் வேணும்னே வேலைக்குப் போகாம திண்ணையிலே
உட்கார்த்திருக்கிரமாரி திட்டறதுதான் என்னாலே தாங்க முடியலே.
இந்தக் குழந்தைக்குதான் இந்தச் சின்ன வயசிலேயே எவ்வளவு ஏமாற்றம் தவிப்பு .
எங்கேயாவது காலூன்றி வேரூன்றி நிர்கமாட்டோமான்னு இது தவிக்கிற தவிப்பும் ,
அரசாங்கச் சட்டமும் சமுதாய மாற்றமும் பெருகி வரும் வெள்ளமாய் வேரோடு
பறித்துப் போட்டு இந்த இளங்கன்றுகளை மெது மெதுவாய் சாகடித்துக்கொண்டு
இருப்பதும் ஒன்றும் நல்லதாய் தெரியலையே. காலம் காலமாய்த்தான் ஜனத்தொகை
பெருகிண்டு இருக்கு. திடீர்னா பெருகிடுத்து. இந்த அரசாங்கமெல்லாம் மொத்த
மொத்தமாய் கணக்கு போட்டுப் பார்கிறதுதான் இவ்வளவு குழப்பத்துக்கும் காரணமோ
என்று தோன்றுகிறது. அந்தக் காலத்திலே யார் இப்படி கணக்கு பார்த்துண்டு
உட்கார்ந்திருந்தா. எனக்கு கல்யாணம் ஆறப்போ இவர் எட்டாம் வகுப்பு
படிச்சுண்டிருந்தார். என்ன வேலை கிடைக்கும்னு நம்பி எங்கப்பா இவருக்கு
கட்டிக் கொடுத்தார். அப்போல்லாம் யார் இப்படியெல்லாம் கவலைப்பட்டா. ஏதோ
இவரே வயலை வித்து வந்த காசிலே ஒரு ட்ரைனிங் முடிச்சுட்டு வாத்யாராய்
ஆனார். இந்தோ முப்பது வருஷம் ஓடிப் போச்சு. இவனோட வயசுலே இவங்கப்பாவுக்கு
இரண்டு குழந்தை ஆயிடுத்து. இவனும் ராஜாவும். இன்னைக்கு என்னடான்னா
வாழ்க்கையின் முதல் படியிலேயே இவன் தடுக்கி விளுந்திண்டு இருக்கான்.
இவனுக்கு என்னைக்கு வேலை கிடைச்சு எப்போ கல்யாணம் ஆஹி குடும்பம்
குட்டின்னு ஆகப்போறானோ தெரியலையே.
என்னம்மா என்னைச் சொல்லிட்டு நீ விட்டத்தை பார்த்துண்டு உட்கார்ந்திட்டே.
நான் போய் அப்பா திட்டின அந்த அட்வர்டைச்மைண்டை பார்த்துட்டு அப்படியே
போஸ்ட் ஆபீசும் போயிட்டு வந்திர்றேன்.
சாமிநாதா இந்தக் குழந்தைக்கு ஒரு வழியைக் காண்பிடாப்பா. அம்மா சொல்லிக்
கொண்டிருந்தபோது அந்த ஆறரை அடிக் குழந்தை ரோட்டில் போய்க் கொண்டிருந்தது.
*********
ஏண்டி முரளி எங்கே காணோம் சாப்பிட்டுக்கொண்டே கணேசன் கேட்டார்.
காலையிலேயே அரை குறையாய் சாப்பிட்டுட்டு லைப்ரரி போறேன்னு போனவன்தான் இன்னும் காணோம்.
எங்கேயாவது ஊரைச் சுற்றிக்கொண்டு இருப்பான் தடிக்கழுதை.
ஏன்னா நான் ஒன்னு சொல்வேன் கேட்பேளா.
என்ன?
இனிமே அவனை தடிக்கழுதை எருமை மாடு ஓட்டச்சிவிங்கி ன்னு ஊர்ல இருக்கிற
பிராணி பேரெல்லாம் சொல்லி திட்டாதீங்கோ. அவன் ரொம்ப மனம் வேதணைப் பட்டுப்
போயிருக்கான். காலையிலே கூட சரியாச் சாப்பிடாம அழுதுகொண்டே இருந்தான்.
நான்தான் சமாதானம் பண்ணி அனுப்பி வைச்சேன். அந்த பேப்பர் என்ன ஓடியா
போயிடறது. இரண்டு நாள் லேட்டாய் அப்ளை பண்ணினால்தான் என்ன?
ஓஹோ , கழுதைக்கு கோபம் வந்திருச்சோ.
இப்பத்தானே சொன்னேன், அதுக்குள்ளே திட்டறேலே.
சரி,சரி, நீ ரொம்ப செல்லம் கொடுத்து அவனைக் குட்டிச்சுவராய் ஆக்கிட்டே அவ்வளவுதான் சொல்வேன் . கணேசன் எழுந்தார்.
நீங்க ஒன்னும் உங்க கோபத்தை சாப்பாட்டின் மேலே காட்டவேண்டாம். அப்பாவுக்கும் பிள்ளைக்கும் இது ஒன்றிலே தான் ஒற்றுமை.
*********
முரளி அன்று மாலையும் வரவில்லை. சின்னவன் ராஜாவும் தங்கைகள் உமாவும்
ராணியும் ஊரெல்லாம் தேடினர். மறுநாள் விடிவதற்குள் ஊருக்கே
தெரிந்துவிட்டது.
ஏம்பா நம்ப வாத்தியார் பையன் ஊரை விட்டு ஓடிபோயிட்டனாமே.
வாத்தியார் ஸ்கூல் பசங்களேயே கழுதை எருமைன்னுதான் திட்டுவார்.
வீட்டுலேயும் அப்படித்தான். பயல் ரோசம் வந்து ஓடிப்போயிட்டான் போலேருக்கு.
அவர்தான் என்ன பண்ணுவார் பாவம். நாளும் வளர்ந்த குழந்தைகள். இருக்கிற
கோபம் வாயிலே வந்துர்றது. அதுக்காக படிச்ச பையன் இப்படி பண்ணலாமோ.
மூன்று நாள் பார்த்துவிட்டு போலீஸ் ஸ்டேசன்லே புகார் பண்ணினார் கணேசன்.
கணக்கு வகுப்பு. வாத்தியார் மனம் வெம்பிய மாம்பிஞ்சாய் வேதனையில் இருந்தது.
ஆருனாளாச்சே இன்னும் ஒரு சேதியும் காணலையே கடவுளே.
சார், சார், ஆறுநாள் இல்லே சார் பதினாறு நாளுக்கு வட்டி போடணும் ,புரியாத பையன் ஒருவன் புலம்பினான் எதிரில்,
சார், உங்களுக்கு ஒரு லெட்டர், பியூன் பெருமாள் கொடுத்துவிட்டுச்சென்றான் .
முரளிதான் என்பதை முகவரியே சொல்லிற்று.
அன்புள்ள அப்பாவிற்கும் அம்மாவிற்கும்
முரளி வணக்கம் பல.
உங்களையெல்லாம் ஆறேழு நாட்களுக்குமேல் தவிக்க வைக்க விரும்பாமையால் இந்த
ஆர்மி காம்பிற்கு வந்த அன்றே இந்த கடிதத்தை நான் எழுதுகிறேன்.
இந்தக்கடிதத்தை உடனே எழுதி விடவேண்டும் என்று என் மனம் தவித்தாலும்
வெகுதூரம் விலகிய பிறகு இந்தக்கடிதத்தை நான் எழுதினால்தான் நானாக
தேடிக்கொண்ட இந்த ஆர்மி வாழ்க்கைக்கு உங்கள் பாசம் தடை ஆகாமல் இருக்கும்
என நானே ஒரு நாலைந்து நாள் விலங்கிட்டுக்கொண்டேன்.
திருச்சி ரெக்ரூட் மென்டில் செலக்ட் ஆன உடனேயே இந்தக் கடிதத்தை நான் எழுதி
இருந்தால் சென்னைக்கு துரத்தி வந்து என்னைத் தடுத்து விடுவீர்கள் என்பதால்
ஆறு நாட்கள் உங்கள் வேதனையை அதிகப் படுத்தியதற்கு என்னை மன்னித்து
விடுங்கள்.
எந்த அதிகப்படியான உயரமும் வளர்ச்சியும் உங்களிடமெல்லாம் எருமைமாடு
என்றும் ஓட்டச்சிவிங்கி என்றும் அர்ச்சிக்கப்பட்டதோ, அதுவே ஒரு
குவாளிபிகேசனாக அந்த ரெக்ரூட் மென்ட் அதிகாரிகலாலே ஒரு புன்னகையால்
அங்கிகரிக்கப்பட்டபோது நான் சற்று மேலும் வளர்ந்தேன்.
சிபார்சுகளுக்கும் ரிசர்வேசன்களுக்கும் நடுவே என் பட்டங்கள் பயன்படாமல்
இருந்த காலம் போய் திட்டப்பட்ட காரணங்களே சிபார்சுகலாய் நின்றபோது நான்
திகைத்துத்தான் போனேன்,
இதோ இந்த பனி மலைகளும் யூகலிப்டஸ் மரங்களும் என் முன்னே பறந்து விரிந்து
கிடக்கும் இயற்கையும் என் உயரத்தை அங்கிகரித்து சிரிப்பதாய் நான்
உணர்கிறேன்.
அம்மாவிற்கு என் நமஸ்காரங்கள்
ராஜா உமா ராணிக்கு என் ஆசிகள்.
அன்புடன் முரளி
*******
யாரையுமே யாருமே சரியாய் புரிஞ்சுக்கிறதே இல்லே. யார் யாரைத் திட்டினா?
அங்க பள்ளிக்கூடத்திலே அறுபது பயல்களோட கத்திப்புட்டு வீட்டுக்கு வந்தா
இவன் அப்ளிகேசன் போடலை, அட்ரஸ் சரியில்லை, ஆபிஸ் சரியில்லை ன்னு எதையாவது
உளறிண்டு இருந்தால் கோபம் வருமா வராதா. வயத்தெரிச்சலில் நாலு வார்த்தை
வந்துர்றது.
கோழி முதிச்சு குஞ்சு முகம் வாடிருமா என்ன. எங்கேயாவது எப்படியாவது
நன்னாயிருந்தால் சரி. இவதான் கொஞ்சம் அழுவா. ஏதோ நாளைக்கே துப்பாக்கியை
தூக்கிக்கொண்டு சண்டைக்குப் போயிருவான்கிற மாதிரி. கொஞ்சம் சமாதானம்
பண்ணனும்.
பர்மிசனில் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்த வாத்தியார் சைக்கிளை வேகமாய் மிதித்தார்.
***********



